ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று, ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

 

நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனியை “புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கைப்பாவை” என்று கடுமயாக சாடினார். மேலும் அவர் பகிரங்கமாக வெளியே வர அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். ஈரானிய மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, “சுதந்திரத்திற்கான ஒரு புதிய பாதை” நெருங்கிவிட்டதாகவும், இஸ்ரேல் அவர்களுடன் நிற்பதாகவும் கூறினார். “ஆனால் இறுதியில் அது உங்களைச் சார்ந்தது, அது உங்கள் கைகளில் உள்ளது,” என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

 

ஈரானின் புதிய தலைவரின் முதல் அறிக்கை என்ன

 

இதற்கிடையில், ஈரானின் ரகசியமான புதிய உயர்மட்டத் தலைவர் 56 வயதான அயதுல்லா மொஜ்தாபா கமேனிவியாழக்கிழமை தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். வளைகுடா அரபு நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடருவோம் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அழுத்தமாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதைப் பயன்படுத்துவோம் என்றும் அவர் சபதம் எடுத்தார். இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தைக்குப் பிறகு பதவியேற்ற அவர் வெளியிடும் முதல் பொது அறிவிப்பு இதுதான்.

 

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனிபோரின் ஆரம்பகட்டத் தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிக்கிறது. அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்ட அவரது அறிக்கையில், 165-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பள்ளித் தாக்குதல் உட்பட, போரில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பழிவாங்கப் போவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.

 

எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத் தாக்கம்

 

ஈரானின் இந்த பிடிவாதமான தாக்குதல்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மற்றும் இராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், புதிய தலைவரான மொஜ்தாபாவின் தந்தையும் ஈரான் நாட்டின உச்சபட்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி மற்றும் மொஜ்தாபாவின் மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் “ஏறக்குறைய அழிந்துவிட்டது” என்று கூறியதோடு, எண்ணெய் விலையை விட ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

போரின் தற்போதைய நிலை

 

ஈரான் மீதான நடவடிக்கை தொடங்கியதில் இருந்து அமெரிக்கப் படைகள் 6,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேல் மீது சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவித் தாக்கினர். பதிலுக்கு இஸ்ரேல் தெற்கு பெய்ரூட் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்தியது, இதில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானில் சுமார் 32 லட்சம் மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர். லெபனானில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

2024 அக்டோபரில் இஸ்ரேலால் அழிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கட்டமைக்கப்பட்டதாகக் கருதப்படும் ஈரானின் அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

 

மத்திய கிழக்கு பதற்றம்

 

ஈராக்கில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் தங்கியுள்ள தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பஹ்ரைன், குவைத், துபாய் மற்றும் சவுதி அரேபியாவிலும் ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகி இருக்கிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “எப்போதும் போலவே, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் முதலில் மற்றும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin