திடீரென பரவிய வதந்தி.. 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கிய நபர்..

திடீரென பரவிய வதந்தி.. 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கிய நபர்.. விதிகளை மீறி விற்பனை!

பெட்ரோல் – டீசல் கிடைக்குமா என்ற வதந்தி பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் ஒருவர் 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏனென்றால் தமிழ்நாட்டில் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்கவே தடை இருக்கும் சூழலில், பெட்ரோல் பங்க்களில் எப்படி தண்ணீர் கேனில் பெட்ரோல் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளதோடு, அந்த பாதையில் எந்தக் கப்பல் பயணித்தாலும் அட்டாக் செய்வோம் என்றும் கூறி இருக்கிறது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

 

இதன் காரணமாக இந்தியாவில் சிஎன்ஜி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மறுபக்கம் கேஸ் சிலிண்டர் பதிவு செய்ய முடியாமல், கேஸ் ஏஜென்சிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனிடையே பெட்ரோல், டீசல் இன்னும் சில நாட்களில் கிடைக்காது என்று மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. ஆனால் அடுத்த 8 வாரங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.

 

இருப்பினும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவிய வதந்தி காரணமாக பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்துவிட்டனர். நேற்றிரவு முதலே பெட்ரோல் நிலையங்களில் அதிகளவில் குவிந்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்ய தொடங்கினர். அது போதாது என்று பெட்ரோலை வாட்டர் பாட்டிலில் வாங்கி சென்றனர்.

 

இப்படியான சூழலில் நேற்றிரவு நபர் ஒருவர் 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோலை நிரப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் பதற்றத்தை மத்திய, மாநில அரசுகள் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

 

இன்னொரு பக்கம் தண்ணீர் கேன், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றில் பெட்ரோல் விற்பனை செய்ய தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிலர் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவோர் குறித்து காவல் நிலையங்களில் தகவல் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் கேனில் பெட்ரோல் ஏன் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended For You

About the Author: admin