ஒஸ்லோவில் அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு:
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது நுழைவாயில் அருகே இன்று நள்ளிரவு உள்ளுர் நேரம் 1 மணியளவில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பினால் தூதரகக் கட்டடத்தில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என நோர்வே காவற்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் நோர்வே அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும், இதற்குப் பின்னால் ஈரான் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளுக்கு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை.
2026 பெப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்கா – ஈரான் இடையே நேரடி மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், டொலர் மதிப்பும் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள், உலகளாவிய எரிபொருள் விலை உயர்விற்கு வழிவகுத்துள்ளன.

