மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம்: மக்கள் அச்சம்!
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
📍 யானைகள் கூட்டமாக இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து, அதிகாலை வரை சுதந்திரமாக உலா வருகின்றன. விடிந்ததும் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்கின்றன. இந்த நடமாட்டம் காரணமாக: வீட்டுத் தோட்டங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைகின்றன.இரவு நேரங்களில் தொழி லுக்குச் செல்லும் மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எந்த நேரத்திலும் மனித – யானை மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
❓ இந்த விவகாரத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் (DWC) மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை நிர்வாகம் இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
“யானைகள் ஊருக்குள் வருவது தெரிந்தும், அவை பகலில் செல்லும் வரை காத்திருப்பது தீர்வாகாது. உயிரிழப்புகள் ஏற்படும் முன் உரிய பாதுகாப்பு வேலிகள் அல்லது யானைகளை விரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” -என பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.
மாநகர எல்லைக்குள் யானைகள் வருவதைத் தடுக்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் களமிறங்க வேண்டும்.

