36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

📍 இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன.
1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர்.

“எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

Recommended For You

About the Author: admin