திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம்
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, 2025 மே 17 அன்று ஹபரணை, தலப்பக்கடை பகுதியில் உயிரிழந்த மலிந்தவின் மரணம் குறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் மலிந்த பிரதானமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் தினமின பத்திரிகை ஆகியவற்றில் பணியாற்றியவர்.
உயிரிழந்த ஊடகவியலாளரின் மனைவி, சுதந்திர ஊடக இயக்கத்தை அணுகி தனது கணவரின் மரணம் தொடர்பான ஆவணங்களுடன் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக அந்த இயக்கத்தின் அழைப்பாளர் லசந்த டி சில்வா தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். விசாரணைகளை திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார், என டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
மலிந்தவின் மனைவி எச்.எம்.ஆர். தினலங்கார முன்வைத்துள்ள முக்கிய விடயங்கள்:
ஆரம்பத்தில் இது ஒரு வீதி விபத்து என தெரிவிக்கப்பட்ட போதிலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார். சம்பவத்தை விபத்தாகக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மரணப் பரிசோதனையில் ‘திறந்த தீர்ப்பு’ வழங்கப்பட்டுள்ளது, இது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில் உள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் நடைமுறை குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.தனது நோக்கம் இழப்பீடு பெறுவதல்ல, உண்மையை கண்டறிவதே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு குடும்பத்தினர் முறைப்படி கொண்டு சென்றுள்ளனர். இந்த முறைப்பாடுகளுக்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.
விசாரணைகளின் சுயாதீனத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த, இந்த வழக்கை உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) மாற்ற வேண்டும் என அந்த இயக்கம் விசேடமாக கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிற்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் சர்வதேச ரீதியிலான கண்காணிப்பிற்கு உள்ளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

