ஊர்காவற்துறையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றவர் கைது!
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப பின்னணியைக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த இந்த நபரை ஊர்காவற்துறை காவல்துறையினா் வலைவீசிப் பிடித்துள்ளனர்.
புங்குடுதீவு மற்றும் ஊர்காவற்துறை பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டங்களை காவல்துறையினா் நீண்டகாலமாகத் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது அவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.
காவல்துறையினா் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் தனது வீட்டையே போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனை நிலையமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை காவல்துறையினா்தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

