யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை: புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் பிரதேசம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், சுதுமலை அம்மன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புகையிலை அற்ற பிரதேசமாக (Tobacco-Free Zone) மாற்றப்பட்டுள்ளன.

சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் (PHI) ம.ஜெயபிரதீப் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் (Lions Club of Manipay Paris) இதற்கான முழுமையான அனுசரணையை வழங்கியுள்ளனர்.

சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள், கிராம சேவையாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் சிகரெட், சுருட்டு மற்றும் ஏனைய புகையிலை உற்பத்திகளின் தீமைகளை எடுத்துரைத்து, ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்த நிகழ்வின் போது, புகையிலை பாவனையினால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு பதாதைகள் கோவில் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் வீதி ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

ஏற்கனவே நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாக் காலங்களில் ஏற்கனவே புகையிலை மற்றும் மதுபானப் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆண்டு முழுவதும் அமுல்படுத்தும் வகையில் நிரந்தர ‘சுகாதார வலயங்களாக’ (Health Zones) அறிவிக்க ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் பாடசாலைகளைச் சுற்றியுள்ள 100 மீற்றர் சுற்றளவில் புகையிலை மற்றும் போதைப்பொருள் விற்பனையை முற்றாகத் தடுப்பதற்கான ‘நிறுத்தப் புள்ளி’ (Buffer Zone) திட்டத்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் போக்குவரத்து நிலையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகையிலை தொடர்பான எந்தவொரு நேரடி அல்லது மறைமுக விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் 21 வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலை விற்பனை செய்வது மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்பனை செய்வது கடும் அபராதத்திற்குரிய செயலாகும்.

மானிப்பாய் அரிமா கழகம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராம மட்டத்திலான விளையாட்டுப் கழகங்கள் மூலம் இளைஞர்களைப் புகையிலை பாவனையிலிருந்து விடுவிக்க விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அதிகம் நடத்தப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin