கட்டுநாயக்கவில் பரபரப்பு – போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் தோஹா வழியாக ஸ்பெயின் செல்லத் திட்டமிட்டிருந்த போதே இவர் பிடிபட்டுள்ளார்.
27 வயதுடைய குறித்த பங்களாதேஷ் நாட்டுப் பிரஜை.
கத்தார் ஏர்வேஸ் (QR-665) விமானம் மூலம் முதலில் தோஹாவுக்கும், அங்கிருந்து ஸ்பெயினுக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
விமான நிலைய ஆவணச் சரிபார்ப்பின் போது கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவர் எல்லை கண்காணிப்புப் பிரிவு (BCU) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பி.சி.யு அதிகாரிகள் நடத்திய அதிநவீன தொழில்நுட்ப சோதனையில், அவரது கடவுச்சீட்டில் இருந்த ஸ்பெயின் விசா முழுக்க முழுக்க போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரப்பூர்வ விசா வழங்கும் நிறுவனம் என நம்பி, 25,000 பங்களாதேஷ் டாக்கா (சுமார் 63,000 இலங்கை ரூபாய்) செலுத்தி இந்த விசாவைப் பெற்றதாக அந்த இளைஞர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

