அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க அரசு தவறியுள்ளது..!
அனர்த்தம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்த நிலையிலும் அது தொடர்பாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
சூறாவளி அனர்த்தத்திற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவிப்புகளும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறைப் பேராசிரியரின் அறிவிப்புகளும் வெளிவந்திருந்தன.
மிகக் கடுமையான சூறாவளி வீசவுள்ளதாகவும், அதனால் பாரிய ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, அதற்கேற்ப முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைக் கவனத்தில் எடுத்து அரசாங்கம் சில ஏற்பாடுகளைச் செய்திருக்குமாக இருந்தால் இந்த அனர்த்தங்களை ஓரளவுக்காவது குறைத்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகின்றது.
இயற்கையான அழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் கூட, முற்கூட்டியே பல விடயங்கள் அறியவருகின்றபோது அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
மலைநாட்டில் 400இற்கும் மேற்பட்டோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தாலும், 350க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையில் மண் சரிவுகள் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றியிருக்க முடியாதா?
மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றன.
முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்திருந்தால் இந்தக் கால்நடைகளை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி இருக்க முடியாதா?
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் முற்கூட்டியே பல விடயங்கள் அறியக் கிடைக்கின்றன.
உயிர்கள், உடைமைகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவில்லை? அரசாங்கத்திடம் சகல வசதி வாய்ப்புகளும் இருக்கின்றன.
அவர்கள் விரும்பிய அனைத்தையும் செய்திருக்க முடியும். அவ்வாறு இருக்கையில் அவர்கள் அதனைச் சரிவரச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் உள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறும்போது, எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
மண் சரிவு ஏற்படக்கூடிய மலைநாட்டில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான, சரியான மாற்று இடங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கிராமம் கிராமமாக மக்கள் மண்ணுள் புதையுண்டு உள்ளார்கள். இவ்வாறான நிலைமை இனிமேலும் ஏற்படாமல் அரசாங்கம் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையை இந்த அழிவுகள் உணர்த்தி நிற்கின்றன என்றுதான் நான் கருதுகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

