வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

