வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..!

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை மக்களிடமே கையளிப்போம்..!

வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

 

எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம், வன பாதுகாப்பு இடங்களாக சுமார் 30 இடங்களை அடையாளம் கண்டு அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது.

 

இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

 

இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது.

 

இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சனை காணப்பட்டது. இதன் காரணமாக குறித்த திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

 

நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே ஒரு இலட்சத்து 1,762.75 காணிகளை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம்.

 

அதிலே வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் காணியும் மன்னார் மாவட்டத்தில் 178,82.8 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48,532.6 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கப்பட இருக்கின்றது.

 

ஆனால் இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சனைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம்.

 

எனவே அதனையும் தீர்க்கும் முகமாக அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம்.

 

அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி, வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்களாக ஒரு விசேடமான குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம்.

 

வனவளதிணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin