நாலாவது நாளாக தொடரும் போராட்டம்..! சிறிதரன், கஜேந்திரகுமாரும் பங்கேற்பு

நாலாவது நாளாக தொடரும் போராட்டம்..!
சிறிதரன், கஜேந்திரகுமாரும் பங்கேற்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாலாவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.

குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin