மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று..!
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்றைய தினம்( 24) வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து, வேத பாராயணங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
கடந்த 15 ம் திகதி திருக்கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய இப் பெருவிழாவின் 10 ம் நாள் இன்றைய தினம் ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவமும் நேற்றைய தினம் இரதோற்சவமும் இடம்பெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, இராம பிரானால் வழிபட்டதாக கூறப்படும், வரலாற்று தொன்மையும், புகழும் மிக்க இவ் ஆலயத்தின் ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் தீர்க்கும் புண்ணிய தலமாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


