விரைவுபடுத்தப்படும் யாழ்.ஆரோக்கிய நகரத் திட்டம்: முதல்வர் மணிவண்ணன் தகவல்

யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப் பாதைக்கும், துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு ஏற்ற வீதிகளாகவும் நடைமுறைப்படுத்த ஆரம்பத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மணிவண்ணன் ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்கவும், வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்குடனும் கடந்த ஆவணி மாதம் முதலாம் திகதி விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று பல்வேறு குழுக்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.

இச் செயற்பாட்டினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகப் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிப்பதற்காகவும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் முகமாகவும் பாடசாலைச் சமூகம் கவனத்திற் கொள்ளப்பட்டது.குறிப்பாக மூன்று பாடசாலை வளாகங்கள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டன.

குறித்த திட்டம் புதன்கிழமையிலிருந்து(21.09.2022) பாடசாலை வேளைகளில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மாத்திரம்(காலை 6.45 – 8.00 மற்றும் பி.ப 1.00-2.00) நடைமுறைப்படுத்தப்படும் என்பதனை அறியத் தருகின்றேன்.

அதற்காகச் சில வழிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
வழிமுறை -1 , கஸ்தூரியார் வீதி ஒரு வழிப்பாதையாகக் கொண்டுவரப்படுகின்றது. அரசடி வீதியிலிருந்து கஸ்தூரியார் வீதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் சுற்றுச் சந்தியினை(roundabout) அடைந்து வலது பக்கமாக கல்லூரி வீதிக்குள் திரும்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை– 2, கே.கே.எஸ்.வீதியிலிருந்து சுற்றுச் சந்தி(roundabout) வரையான கல்லூரி வீதி ஒரு வழிப்பாதையாகக் கொண்டு வரப்படுகின்றது. இங்கு கே.கே.எஸ் வீதியிலிருந்து யாழ்.இந்துக்கல்லூரி நுழைவாயிலை அடையும் வாகனங்கள் சுற்றுச் சந்தியினை அடைந்து வலது மற்றும் நேரான வீதிகளினூடாக வெளிச் செல்ல முடியும்
வழிமுறை-3, கல்லூரி ஒழுங்கை துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இவ் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இத் திட்டமானது ஒரு பாதுக்காப்பு மிக்க வீதி நடைமுறைகளைப் பாடசாலைச் சமூகத்திற்கும், பொதுமக்களிற்கும் ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதி வழிமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் குறிப்பிட்ட வீதிகளில் இன்று முதல் வைக்கப்படும். அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ் ஆரம்பப் பரீட்சார்த்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதை அறியத் தருகின்றேன்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலின் உலக சுகாதார ஸ்தாபனம், யாழ் மாநகரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் யுனிசெப், சுகாதார சேவைகள் திணைக்களம், கல்வி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச அரசசார்பற்ற நிறுவனங்கள்,பொலிஸ் நிலையம், யாழ்.மாவட்டச் செயலகம், மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் உட்படப் பல்வேறு தரப்பினரும் இத் திட்டத்தின் பங்காளிகளாகத் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் யாழ்.மாநகர முதல்வர் அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor