ஒருபுறம் :மாகாணசபை தேவை:மறுபுறம் தேவையில்லை!

இனப்பிரச்சினைக்கு மாகாண சபை பொறிமுறையை தீர்வாக மாட்டாதென ஜேவிபி பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு  மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

தற்போதைய  நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க  நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணை தொடர்பிலும் வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும்  மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும்  ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழ் மக்களிற்கு அரசியல் பிரச்சினைகள் இல்லையெனவும் பொருளாதார பிரச்சினைகளே உள்ளதாக ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin