சிலாபத்தில் உயிரிழந்த மூவரும் கொலையா?

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், சிலாபம் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் அந்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள், 51 வயதான வீட்டின் உரிமையாளரான சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா என அடையாளம் காணப்பட்டனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டிருந்தன.

உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.

சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் பயின்ற இவர்களது மகள் அடுத்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த வீட்டில் இருந்த சுமார் 25 இலட்சம் தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிற்குள் வௌியாட்கள் யாரும் நுழையாமல் தங்கப் ஆபரணங்கள் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது.

இன்று பிற்பகல் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலங்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin