சவளக்கடையில் மீன் பிடித்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றது!

மீன்பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் திங்கட்கிழமை (14) மாலை இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானப்பிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே முதலை இழுத்துச் சென்றுள்ளதுடன் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை.

இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது .

காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள் ,சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin