குப்பைகளை உண்ட நிலையில் திடீரென யானை உயிரிழப்பு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை, புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (5) குறித்த யானை அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை உண்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், யானையின் இறப்புக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை. அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று மருத்துவப்பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் எனத்தெரிவித்துள்ளனர்.

மேலும்,,இப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உண்ண தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன், அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.

அம்பாறை நகரப்பகுதி உள்ளிட்ட ஏனைய புறநகப்பிரதேசங்களிலிருந்து இப்பகுதிக்கு குப்பைகள் மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன.

இதனால் அம்பாறை நகரிலிருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் தினமும் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதுடன், மலை போல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளைத்தேடி உணவுக்காக வருகின்றன.

தாவர உண்ணியான காட்டு யானைகள குப்பைகள், பொலீத்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது.

யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் 160 லீட்டர் தண்ணீரைக் குடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: admin