டொரான்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு

கனடா – டொரான்டோ பெரும்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான பிரசன்னா காலிங்கராஜன் என்பவர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரான்டோ பெரும்பாகத்தில் அமைந்துள்ள திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் இரண்டாவது சந்தேக நபராக இவர் கருதப்படுகிறார்.

டொரான்டோ பெரும்பாகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நிகழ்ந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இந்த இரண்டாவது சந்தேக நபர் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி டொரான்டோ பெரும்பாகத்தில் உள்ள வெவ்வேறு திரையரங்குகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மார்கம் நகரைச் சேர்ந்த 27 வயதான Andrew Douglas என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, மே 22ஆம் திகதி தமிழரான பிரசன்னா காலிங்கராஜனுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

மேலும், மே 12ஆம் திகதி ஸ்காபரோவில் தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin