யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேர் கொல்லப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் , சமர்ப்பணங்களை முன்வைக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் (17) உத்தரவிட்டுள்ளது.
மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு (மே 17) உயர் நீதிமன்ற நீதிபதிகள் யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரண் எம்.ஏ.சுமந்திரன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கும் இந்த மனு தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு அழைப்பாணை விடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து குறித்த மனு மீதான விசாரணை செப்டம்பர் நான்காம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சிறு குழந்தை உட்பட எட்டு பொதுமக்களை வெட்டிக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு மரண தண்டனை விதித்தது.
அதனையடுத்து, சுனில் ரத்நாயக்க, தன்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.
மே 20, 2017 அன்று,மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பிரதிவாதியான சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பை உறுதி செய்தது.
அதன் பின்னர், மரண தண்டனை பெற்ற சுனில் ரத்நாயக்க, 2020 மார்ச் 26 அன்று, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ், குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், மன்னிப்பு வழங்குவதில் ஜனாதிபதி பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறை இருப்பதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பொது மன்னிப்பு வழங்கி குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

