கல்லூரி மாணவர்கள் நால்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்த போதும், குறித்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் இன்று காலையில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அலையில் மாணவர் ஒருவர் சிக்க, அவரை மீட்க மற்ற மாணவர்கள் முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பேர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரு மாணவர் சடலமாக மீட்கப்பட்டதோடு, இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிருடன் மீட்கப்பட்டு, 3 மாணவிகள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாயமானவர்களை விரைந்து தேடும் பணியில் தீயணைப்பு துறையினர், கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் அனைவரும் ஈடுபட்டதையடுத்து, மூன்று மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உடற்கூறு பரிசோதனைக்காக உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin