நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அங்கீகாரம் நேற்றைய தினம் பெறப்பட்டது.

இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்த சில அறிக்கைகளை இணையத்தின் ஊடாக வெளிப்படுத்துவதனை தடை செய்தல், நிகழ்நிலை கணக்குகள் மற்றும் போலியான கணக்குகளை தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதனை தடுக்கும் வகையிலும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது.

அத்துடன், இந்த சட்டமூலம் நாட்டில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை அடையாளம் காணவும், தவறான அறிக்கைகளை பகிர்வதற்காக பணம் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்படுவதனை தவிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும், நிகழ்நிலை பாதுகாப்புக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கு குறித்த சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

இருப்பினும், இந்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடசியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட 56 அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. மேலும், சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin