உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்த கௌதம் அதானி

இந்திய செல்வந்தர் கௌதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை பின்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் அதானி குழுமம் கால்பதித்து வருகிறது.

தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை, கடந்த பெப்ரவரி மாதம் முந்தினார்.

தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய செல்வந்தர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். கடந்த ஜூலை மாதம் உலக செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசொஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறினார்.

11வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி
இந்நிலையில், 137.4 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டுக்கமைய, ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நபரொருவர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் தடவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தரவரிசையில் அமெரிக்காவின் எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முறையே முதலாவது, இரண்டாவது இடங்களில் உள்ளனர். 91.9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 11 ஆவது இடத்தில் உள்ளார்.

Recommended For You

About the Author: webeditor