புத்தளத்தில் கோர விபத்து 09 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் , ஒருவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த விபத்தின் போது இரண்டு சொகுசு கார்களும் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin