எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பாதுளை மாவட்டம் மும்மொழி மாவட்டம் பெயரிடப்படும் என அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட பல்வேறு சமூகங்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்கள், சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தாம் பேசும் மொழிகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள சகல பிரஜைகளுக்கும் உரிமையுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளில் 11 பிரிவுகளில் மும்மொழி பிரதேச செயலக பிரிவுகளாக செயற்படும்.
இதற்கமைய பதுளை மாவட்டத்தில் மாவட்ட செயலகம்,பிரதேச செயலாளர் அலுவலகங்கள்,ஊவா மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள், பதுளை போதனா வைத்தியசாலை,பொலிஸ் நிலையங்கள், கமத்தொழில் சேவை மத்திய நிலையம் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் மும்மொழிகளில் சேவைகள் வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன கூறியுள்ளார்.