ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22) தெரிவித்தனர்.

விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு அமைய வவுனியாவில் நேற்று (21) இரவு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்ட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் , கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor