விமான விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) மாலை 5 மணியளவில் ஓரிகான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஒற்றை இயந்திரம் கொண்ட அந்த விமானம் நேற்று மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது.

இதில் 3 பேர் உயிரிழந்தனர் என சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. எனினும், அவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதேவேளை, அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விவரமும் தெளிவாக தெரியவில்லை.

இந்த விபத்து, போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது.

அந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் செல்கின்றன. அந்த மின் இணைப்பை, மின்சார நிறுவனம் நிறுத்த வேண்டியுள்ளது.

அதன்பின்னரே, விபத்து நடந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்க முடியும் மற்றும் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய முடியும் என பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து பிசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor