புதிய தொழில் நுட்பத்தின் கீழ் தயார்படுத்தப்படும் இலங்கை இராணுவத்தினர்

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர் முகம்கொடுக்கவிருக்கும் புதிய சவால்கள் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல்களின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளவில் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கான சில நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய சர்வதேச மோதல்களை சில ஊடகங்கள் மக்கள் கருத்தாடல் வரையில் கொண்டுச் சென்றிருப்பதால் உலக மக்களின் பாதுகாப்புக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாரம்பரிய பாதுகாப்பு முறைமைகளிலிருந்து விடுபட்டு, நிலவுகின்ற மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor