பூசாரியின் தாக்குதல் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தேவாலயத்தில் நோயை குணப்படுத்திக் கொள்ள சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளார்.

அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (6) இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுர ஜயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக குறித்த ஆலயத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மேற்படி இருவரும் சென்ற நிலையில் சிங்கள பூசகரின் மனைவியுடன் உயிரிழந்த நபருக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதுடன், குறித்த நபர் மீதும் அவரது சகோதரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரி படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் வருகை தந்த காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து பூசாரி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: admin