வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி.

 

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இதன்போது சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

 

விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விஜயத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநரை முதலில் சந்திக்க கிடைத்தமையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

 

இலங்கையின் வளர்ச்சிக்கான பசுமை திட்டங்களை முன்னெடுப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சூரிய, காற்றாலை, நீர் மின் உற்பத்திக்கான வளங்களை இலங்கை கொண்டுள்ளமையால், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen) திட்டத்தை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

 

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், கௌரவ ஆளுநரிடம் உறுதியளித்தார்.

ஊடகப்பிரிவு,
ஆளுநர் செயலகம்,
வடக்கு மாகாணம்.

Recommended For You

About the Author: S.R.KARAN