யாழில் விளக்கமறியலில் உயிரிழந்த கைதி தொடர்பில் இரு பொலிசாருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டினார்கள்.

உயிர் இழப்புக்கான காரணம்
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாட்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று மேற்கொள்ளப்படவுள்ள உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor