நாளை விடுதலையாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கள் கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விடுத்த கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

தான் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பலமான கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதனை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் அடுத்த சில தினங்களுக்குள் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் எனவும் அதன் பின்னர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பார் எனவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு எடுத்திருந்தது.

இதனடிப்படையில், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரும் சத்தியக் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களில் அவர் கடந்த 13 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய கடூழிய சிறைத்தண்டனை
அத்துடன் விடுதலைக்கு தேவையான ஆவணங்களை நீதியமைச்சு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியிருந்தது.

அந்த ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர், ரஞ்சன் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்றம், 2021 ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுவரை, ராமநாயக்கவின் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

வாழ்நாளில் நீதிமன்றத்தை விமர்சிக்க போவதில்லை

இதனிடையே நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று நீதிமன்றத்திற்கு சத்தியக் கடிதத்தை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அலரிமாளிகைக்கு வெளியில் தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது, இழிவானது மட்டுமன்றி ஒட்டுமொத்த நீதித்துறையையும் அவமதிக்கும் வகையிலானது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது தொடர்பில் முழு நீதித்துறையிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தனது சத்தியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட கருத்தை, மீளப் பெறப் போவதில்லை எனக் கூறியுள்ள அவர் , உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய கருத்திற்கும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அத்துடன், தனது வாழ்நாளில், ஒட்டுமொத்த நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் சத்தியக் கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor