ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு கைதான வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர் ஒருவர் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வு குறித்து கிண்டி காவல்நிலையத்தில் தீவிர விசாரனை மேற்கொண்டு காரணத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ள கருக்கா வினோத் என்பதும், ஏற்கெனவே பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியந்தது.

இதையடுத்து, ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பிடிபட்ட கருக்கா வினோத்திடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், எந்த கேள்வியையும் கேட்டாலும் அவர் சிரித்து கொண்டே இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதன்பின்னர் போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த கருக்கா வினோத், நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததாலும், தான் சிறையில் இருந்து வெளிவருவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததாலும் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது மனைவி தன்னோடு இல்லாத காரணத்தினால் வெடிகுண்டு வீசியதாகவும் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கருக்கா வினோத் தனது வாக்குமூலத்தில் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Recommended For You

About the Author: admin