நல்லூரில் அதிகார துஷ்பிரயோகம்! பக்தர்கள் விரக்தி!!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய வளாகத்தினுள் தனது வாகனத்தை அடாத்தாக நிறுத்தியதால் ஆலயச்சூழலில் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுடைய வருடாந்த மஹோற்சவம் நடந்து வரும் நிலையில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு சிவப்பு வெள்ளை வேலிகளுக்குள் எவ்வித வாகனங்களும் அனுமதிக்காதவாறு பாதுகாப்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் சிவப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்ட தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய முன்றலில் பக்தர்கள் பிரதட்டை அடிக்கும் மணல் மேல் தனது காரை நிறுத்தியுள்ளார்.

ஆலய சூழலில் கடமையில் இருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையினுடைய பணியாளர்கள் குறித்த காரினை அகற்ற முற்பட்டபோதும் அங்கு கடமையில் இருந்த பொலிஸார் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநகர சபை பணியாளர்களையும் மீறி குறித்த காரினை நிறுத்த அனுமதித்துள்ளனர்.

மேலும் தென்னிலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் சிவப்பு வெள்ளைக் கொடி கட்டப்பட்ட ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாடியதாக நேரில் கண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குறித்த வாகனத்தை ஆலய வளாகத்தில் நிறுத்த அனுமதித்த பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்விடத்தில் வாகனத்தைவிட்எதற்காக அனுமதித்திர்கள் என வினாவியபோது”அவர் IG இன் சகோதரர்; அவரை எப்படி நாம் மறிப்பது” என அங்கு கடமையில் நின்ற பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொலிஸார் சென்று குறித்த தென்னிலங்கைவாசியை அழைத்துவந்தார்.

அதனைத்தொடர்ந்து குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர் உடனடியாக தமது வாகனத்தை அப்புறப்படுத்தினார்.

பக்தர்கள் பிரதட்டை அடிக்கக்கூடிய மணல்மேல் காரை நிறுத்தியமையை ஏற்கமுடியாது என ஆலயச் சூழலில் நின்ற பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN