யாழ் தையிட்டி விகாரை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ள விடயம்

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wikremesinghe) கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

மேலும் அது தொடர்பில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் (04.05.2023) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்க பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த பகுதிகளில் சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் அந்தப் பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டிருப்பதையும் சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையிலேயே, தையிட்டி விகாரை தொடர்பாக சில தரப்புக்களினால் தற்போது பேசப்படுகிறது. இதற்கான அடிக்கல் 2018 ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநரினால் நாட்டப்பட்டிருக்கிறது.

 

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரிடம் கோரியிருக்கின்றேன்.

அவற்றை ஆராய்வதுடன், விரைவில் ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் பிரஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன்.

வெடுக்குநாறி விவகாரத்தினை சுமூகமான முறையில் தீர்த்து வைத்தது போன்று இந்த விடயங்களும் ஜனாதிபதி சரியான முறையில் தீர்த்து வைப்பார்.” என்றும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor