யாழில் கற்ப்பப்பை வெடித்ததில் உயிரிழந்த சிசு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் (11-04-2023) குழந்தை பிறந்த போதிலும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை முன்னெடுத்துள்ளார்.

பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவிற்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்தார்.

இதனடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: webeditor