யாழில் அனுமதி இன்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் மீட்பு!

யாழ். இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்றைய தினம் (02-04-2023) முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor