தனியார் வகுப்புக்கு சென்ற 14 வயது சிறுமி மீது பாலியல் தொல்லை

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் தொல்லை கொடுக்க இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுமி மீது இடைநடுவே இளைஞரொருவர் பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டையடுத்து காவல்துறையினர் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இளைஞனைக் கைது செய்யவேண்டுமென கோரி கிராம அபிவிருத்திச் சங்கம் மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று பதில் காவல்துறை பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களுக்கு உறுதி வழங்கியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

Recommended For You

About the Author: webeditor