யாழ் மாநகர முதல்வர் தெரிவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்டுள்ள கருத்து

70 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அவரை வினவிய நிலையில், அது குறித்து கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மாநகர சபையில் மக்கள் எமக்குப் பெரும்பான்மையினை வழங்கத் தவறி விட்டார்கள். அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தைப் பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாகக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

நீண்ட அரசியல் அனுபவம்
எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையைத் தமிழரசு கட்சி பூரணமாகக் கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள் ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது. எதிர் காலத்தில் மாநகர சபையினை தமிழரசு கட்சி கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.

மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தைப் பெறுவதற்காக பின் வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்குக் கலந்து கொள்ளாது ஏனைய கட்சிகளின் கதைகளைக் கேட்பதற்கு நாம் தயார் இல்லை.

ஏற்கெனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராகச் செயற்பட்டவர். அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் ஆளுமை மிக்கவர் அவ்வாறான ஒருவரைத்தான் இம்முறை எமது வேட்பாளராகத் தெரிவு செய்தோம்.

அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசு கட்சி முதல்வர் வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளது.

மாநகர சபை முதல்வர் பதவி
எனவே, ஏனைய கட்சிகள் எமது கட்சியைப் பழிவாங்கும் முகமாகச் செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட முதல்வர் ஆனோல்ட் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பொங்கு தமிழ் நிகழ்வினை யாழ் மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் நடாத்தி தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்த மொழி ஆற்றல் உள்ளவரே மாநகர சபை முதல்வர் பதவிக்குத் தகுதி உள்ளவர் என்ற ரீதியிலே கட்சி தெரிவு செய்தது.

அதேபோல அவர் பல்கலைக்கழக பட்டதாரி ஒரு முதல்வரானவர் படித்தவராகவும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் கட்சி இமானுவேல் ஆனோல்ட் அவர்களைக் கடந்த காலங்களில் முதல்வராகத் தெரிவு செய்திருந்தது எதிர்வரும் காலங்களில் மக்கள் எமக்குப் பூரண ஆணை புழங்குமிடத்துச் சபையினை திறம்படச் செயற்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor