நெல்லிற்கான உத்தரவாத விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா விவசாயிகள்

நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி வவுனியா, ஓமந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா, தாண்டிகுளம் விவசாய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் ‘பயிர் அழிவிற்கான நஸ்ட ஈட்டினை வழங்கு, விவசாயிகளின் நாளைய எதிர்காலத்திற்கு வழியை ஏற்படுத்துங்கள், நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்கு’ என எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலக வாயிலை அடைந்த விவசாயிகள் சார்பாக ஒரு குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன், தமது கோரிக்கை தொடர்பிலும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கு குறையாத வகையில் உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானி மூலம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் விவசாயிகளிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor