சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் குறித்து குருநகர் மக்கள் விடுத்துள்ள செய்தி!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவதாகவும், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக் கடற்பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறான கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் வேதனை தருகின்றது.

ஆகவே இது தொடர்பான கருத்துக்களை தெளிவுபடுத்தும் வகையில் கடலட்டைப் பண்ணையாளர்களாகிய நாம் நேரடிக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

அனுமதிப் பத்திர ஆவணங்கள்
கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருவதாகவும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதற்காக அவற்றை சட்டவிரோத பண்ணைகளாக கருத முடியாது.

எமது பகுதிகளில் அட்டை வளர்ப்புக்காக உரிய அனுமதிகளுக்கு விண்ணப்பித்தும் அனுமதி பெற்றுமே அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

சிலர் இதன் காரணமாக கடல் மாசடையும் மீன்வளம் பெருகாது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

அட்டை வளர்ப்பு சுமார் ஒரு அடி கடல் நீர் உள்ள சூடான பகுதியிலே இடம்பெறுகிறது. சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

இதனைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்திருந்தும் மக்களைக் குழப்பும் வகையில் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறைந்தது 3 மாதங்கள்
சில பண்ணையாளர்களுக்கு பண்ணைகளுக்கு ஆவண ரீதியாக (பேப்பர் வேர்க்) நிறைவு செய்து கடலட்டை பண்ணையை அமைப்பதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும்.

மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் எடுத்து கடற்றொழில் அமைச்சராக இருக்கின்ற காலப் பகுதியில் எமது மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாராத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆவண ரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில் தளுவல் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த தளுவல் அனுமதிகள் அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை.

கடற்றொழில் சங்கங்கள், நீரியல் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்த பின்னரே குறித்த இடத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கப்படுகிறது.

பாதிப்பு ஏற்படாது
நீர்வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தி சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கட்றறொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன.

அதேவேளை எந்த திணைக்களங்களுடனும் தொடர்புக்கொள்ளாமல் சிலரினால் தான்தோன்றித்தனமாக சில பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நாங்களும் அறிகின்றோம். அவை அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இதனை கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தி இருப்பதை செய்திகளில் அவதானித்திருக்கின்றோம். குருநகர் மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் காணப்படும் கடல் அட்டை பண்ணைகள் கடல் தொழில் சங்கத்தின் அனுமதி நீரியல் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி பெற்றுச் செயல்படுத்தப்படுகிறது.

ஆகவே கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்கின்றது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம்.”என தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor