60 நாள் தான் டைம்.. உடனே கிளம்புங்க! அமெரிக்காவில் இந்தியர்கள் தலையில் இறங்கும் பேரிடி.. அதிர்ச்சி!
அமெரிக்காவில் உள்ள பல ஆயிரம் இந்திய ஐடி ஊழியர்களுக்குக் கடந்த சில மாதங்களாகவே இரண்டு பக்கமும் அடி விழுந்து வருகிறது
ஒரு பக்கம் மெட்டா, அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் பெரியளவில் வேலை நீக்கங்களைச் செய்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் இதில் பாதிக்கப்படும் H-1B விசா ஹோல்டர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் வேலை என்பது இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாக ஒரு கனவு.. அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுடன் செட்டில் ஆனால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதால் பலரும் அதற்காகவே முயன்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல ஆயிரம் பேர் இதை வெற்றிகரமாகச் செய்தும் கூட காட்டினார்.
நிலைமை மோசம்
ஆனால், கடந்த சில மாதங்களாக அங்குள்ள இந்தியர்களுக்கு நிலைமை அவ்வளவு ஈஸியாக இல்லை. ஒருவேளை நீக்க மெயில் அவர்களின் வேலை, வீடு, குழந்தைகளின் கல்வி மட்டுமின்றி, நாட்டில் தங்கும் உரிமையைக் கூட கேள்விக்குறியாக்குகிறது. பல இந்தியர்கள் அங்கே பல ஆண்டுகளாகத் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிய நிலையில், இப்போது தாங்க முடியாத அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனர்.
2 மாதம் தான் டைம்
H-1B விசா முறைப்படி, வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாகப் புதிய வேலையில் சேர வேண்டும். இதற்கு அவர்களுக்கு 60 நாட்கள் மட்டுமே டைம் வழங்கப்படும். இந்தக் காலக்கெடுவுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். கால அவகாசத்தை அதிகரிக்கப் பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் தற்காலிகமாக B-2 விசிட்டர் விசாவிற்கு மாற முயல்கிறார்கள். இந்த விசாவில் அவர்கள் ஆறு மாதங்கள் வரை அமெரிக்காவில் தங்க முடியும். ஆனால், டிரம்ப் அரசு இப்போது குடிவரவு ரூல்ஸை கடுமையாக்கியுள்ளதால் இந்த முறைகூட கடினமாகி வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
B-2 நிலைக்கு மாற முயற்சிக்கும் பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B ஊழியர்களிடம் அதிகாரிகள் கூடுதல் ஆவணங்களைக் கேட்பதாகவும் அப்படியே ஆவணங்களைக் கொடுத்தாலும் கூட விசா மறுப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணி இல்லாத காலத்தில் ஹெச்-1ல் இருந்து பி-2 விசாவுக்கு மாறுவது சட்டப்பூர்வமாக இருந்தாலும், ஒப்புதல்களைப் பெறுவது கடினமாகி வருகிறது.
இந்தியர்கள்
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் ராஜீவ் கன்னா கூறுகையில், “பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B ஊழியர்கள் B-1/B-2 விசா கோரி விண்ணப்பிக்கும்போது, கூடுதல் ஆவணங்கள் கேட்பதும், விசாவை மறுப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது உண்மை தான். இது தொடர்பான வழக்குகள் எனது டீமிற்கே கூட அதிகளவில் வருகிறது” என்றார். அமெரிக்காவில் உள்ள மற்ற வழக்கறிஞர்களும் கிட்டத்தட்ட இதே கருத்தை தான் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அமெரிக்காவில் பணிநீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்போது இந்த விசா கெடுபிடிகளும் அதிகமாகியுள்ளதே இந்தியர்களுக்குக் கவலையாக உள்ளது.
2026ஆம் ஆண்டு வரை 144 தொழில்நுட்ப நிறுவனங்களில் 110,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் H-1B விசா வைத்திருப்பவர்கள் என்றும், அவர்களில் பலர் இந்தியர்கள் என்றும் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். இந்திய தான் இன்றும் H-1B விசா திட்டத்தின் மிகப் பெரிய பலனடைந்த நாடாக உள்ளது. 2025ல் அங்கீகரிக்கப்பட்ட 4,06,348 H-1B விசாக்களில் 2,83,772 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நடக்கும் மாற்றங்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பெரிய பாதிப்பு
பல இந்தியர்களுக்கு இந்தப் பணிநீக்கங்கள் வெறும் சம்பள இழப்பை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து கிட்டத்தட்ட கிரீன் கார்டு வாங்கும் நிலையில் உள்ளவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் அமெரிக்க நிறுவனத்திற்காக உழைத்துவிட்டு, இப்போது கைவிடப்படுவதாக இந்தியர்கள் உணர்கிறார்கள்.
இது தொடர்பாகப் பிரபலக் குடிவரவு நிறுவனத்தின் சிஇஓ சியாவ் வாங் கூறுகையில், “இந்திய H-1B விசா ஹோல்டர்கள் அதிக சிரமத்தைச் சந்திக்கின்றனர். அவர்களின் கிரீன் கார்டு காத்திருப்பு காலம் ஏற்கனவே நீண்டு இருக்கிறது. அப்படியிருக்கும்போது, இது மற்றொரு கதவு அடைக்கப்படுவதற்குச் சமம். இதனால் பலரும் தங்கள் சொந்த நாட்டிற்கோ அல்லது கனடா, ஐரோப்பாவிற்கோ செல்ல முடிவு செய்துள்ளனர்” என்றார்.
மாற்று வழிகள்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் B-2 விசாவை தவிர்த்து, F-1 மாணவர் விசாக்கள், O-1 விசாக்கள் மற்றும் நிறுவன மாற்றங்களுக்கான L-1 விசாக்கள் மூலமும் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் ஆப்ஷன்கள் குறித்தும் யோசித்து வருகிறார்கள். சிலர் கனடாவின் எக்ஸ்பிரஸ் என்ட்ரி மற்றும் குளோபல் டேலன்ட் ஸ்ட்ரீம் போன்ற திட்டங்களின் மூலம் கனடாவிற்குச் செல்வது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்

