ஈரானின் புதிய வியூகம்: ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு அருகேயுள்ள ரமத் கான் (Ramat Gan) நகரில் நேற்றிரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் மேல் தளத்தில் வசித்து வந்த முதிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் ‘கொத்துக் குண்டுகள்’ (Cluster munitions) ஏற்படுத்தக்கூடிய பாரிய அழிவுகளுக்கு இந்தச் சம்பவம் ஒரு வலுவான உதாரணமாக மாறியுள்ளது
என பிபிசி (BBC) செய்தி நிறுவனம் தனது கள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் கோர முகம்:
உடைந்த கொங்கிரீட் கற்கள் மற்றும் வளைந்த இரும்புக் கம்பிகளுடன் கூடிய ஒரு பெரிய துளை, ஈரானியக் கொத்துக் குண்டு கூரையைப் பிளந்துகொண்டு வந்ததற்கான சுவடாக அந்த வீட்டில் காணப்படுகிறது.
உயிரிழந்த முதியவருக்கு நடமாடுவதில் சிரமம் இருந்ததாகவும், அபாய ஒலி (Alarm) ஒலித்தபோது அவர்களால் பாதுகாப்பறைக்குச் (Safe room) செல்ல முடியவில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவர்களில் சிதறியுள்ள பாரிய துளைகள், முற்றாகச் சிதைவடைந்த வீட்டின் முன்பகுதி மற்றும் வீதி வரை பரவியுள்ள சாம்பல் நிறத் தூசிகள் ஆகியவை இந்தச் சிறிய குண்டுகள் (Bomblets) ஏற்படுத்தக்கூடிய பேரழிவைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
தாக்குதலின் பின்னர் பாதுகாப்பறையிலிருந்து வெளியே வந்த சிஹால் அமிர் (Sigal Amir) என்ற அயலவர், அந்த முதிய தம்பதியின் வீட்டின் முன்பக்கக் கதவு உடைந்து தொங்கிக் கொண்டிருந்ததையும்,
வீடு முழுவதும் புகையும் இடிபாடுகளுமாக இருந்ததையும் பிபிசி-யிடம் விவரித்துள்ளார்.
ஈரானின் புதிய வியூகம்:
குடியிருப்புப் பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துவிட்டதாகவும்,
ஈரானின் 70% பலிஸ்டிக் ஏவுகணைச் செலுத்திகளைத் தாம் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. இருப்பினும், ஈரான் தற்போது ‘கொத்துக் குண்டுகளை’ (Cluster-munitions) சுமந்து செல்லும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.
இவை வானிலேயே வெடித்துச் சிதறிப் பரந்த நிலப்பரப்பில் பல சிறிய குண்டுகளை வீசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இவற்றை வான் பாதுகாப்புக் கவசங்களால் இடைமறிப்பது (Intercept) மிகவும் கடினமானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

