‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்போம்; ஆனால் சீனாவுடன் இதை செய்ய வேண்டும்..?’ நிபந்தனை விதித்துள்ள ஈரான்,,!
அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கடந்த 28 -ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்கள் காரணமாக போர் சூழல் உருவாகியுள்ள நிலையில், இதுவரை 1350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
போரின் எதிரொலியாக, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை மற்றும் உணவுகளை ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கிய நீர் போக்குவரத்து வழியாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. அத்துடன் சில கப்பலை மீதும் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ஈரான் அறிவித்தது.
அதன்படி இன்று இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடல் எல்லைக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஈரான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்போம். ஆனால், சீனாவின் யுவானில் வர்த்தகம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. ஏனெனில், ஈரானுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், சீன பண மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றால் அது சீனாவுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலமாக அமையும் என்பதால் ஆகும்.
காரணம் அமெரிக்காவை வர்த்தக ரீதியாக தைரியமாக எதிர்க்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனால் சீனாவை உள்ளே இழுத்து, அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என ஈரான் விரும்புகிறது.
இதேவேளை, ஈராக், லிபியா மற்றும் வெனிசுலா ஆகியவை டாலரில் எண்ணெய் வர்த்தகம் செய்ய மாட்டாம் எனக் கூறியதால் தான் அமெரிக்கா அந்த நாடுகளை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

