‘காலி குமாரி’ புகையிரதம் விபத்து -இரு இளைஞர்கள் பலி
இன்று காலை (பெப்ரவரி 22, 2026) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கோர புகையிரத விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘காலி குமாரி’ (Galle Kumari) விரைவு புகையிரதத்துடன், புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற கப் (Cab) ரக வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், புகையிரதத்துடன் மோதிய கப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை புகையிரதத்தால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து நடந்த புகையிரதக் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் (Gate) இல்லை எனவும், அங்குள்ள வர்ண சமிஞ்சை (Signal) முறைமை சரியாக இயங்கவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. குறிப்பாக களுத்துறை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இவ்வாறான சமிக்ஞை கோளாறுகள் உயிர்ப்பலிகளுக்கு முக்கிய காரணமாகின்றன.

