அக்குரேகொட படுகொலை : அமைச்சரின் அறிவிப்பு

அக்குரேகொட படுகொலை : அமைச்சரின் அறிவிப்பு

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரமான படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (பெப்ரவரி 20, 2026) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரிகளில் ஒருவர் காவல்துறையினரால் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இக்கொலைச் சம்பவமானது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் ஒன்றின் வழிகாட்டலில் (Contract Killing) இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சபையில் கவலை தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சட்டத்தரணி கையாண்ட ஒரு பாரிய காணித் தகராறு தொடர்பான வழக்கு அல்லது ஒரு முக்கிய குற்றவாளிக்கு எதிராக அவர் முன்னெடுத்த சட்ட நடவடிக்கைகள் இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக பல நாட்களாக அந்தப் பகுதியைக் கண்காணித்து (Recce), மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட ‘கொந்தராத்து’ (Contract Killing) கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி, துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் ஒரு முக்கிய பாதாள உலகத் தலைவனின் நேரடி உத்தரவின் பேரில் செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin