எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியீடு: பிரிட்டனில் காவற்துறையின் அதிரடி விசாரணை!
அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள், பிரிட்டனில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரித்தானியாவின் பல்வேறு காவல் துறைகள் ஒன்றிணைந்துள்ளன.
📍 நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் துறைகளை ஒன்றிணைத்து, இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ய ஒரு “தேசிய ஒருங்கிணைப்புக் குழு” (National Coordination Group) அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனின் ஸ்டான்ஸ்டெட் (Stansted), லூட்டன் (Luton) மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்கள் வழியாக எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானங்கள் மூலம் பெண்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து எசெக்ஸ் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையர் காவற்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
வர்த்தகத் தூதராக இருந்த காலத்தில் எப்ஸ்டீனுக்கு ரகசியத் தகவல்களைப் பரிமாறியதாக எழுந்த புகாரின் பேரில், தேம்ஸ் வேலி (Thames Valley) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் புகார்களை லண்டன் பெருநகர காவல்துறை (Met Police) விசாரித்து வருகிறது.
இளவரசர் அண்ட்ரூவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர், எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றபோது நடந்த சட்டவிரோதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்தார்களா? என்ற கோணத்திலும் மெட் காவற்தறை ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
🔍 குற்றச்சாட்டுகளின் அளவு மற்றும் சர்வதேச சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த விசாரணை முழுமையடையச் சற்று காலம் எடுக்கும் என்று தேசிய காவல் தலைவர்கள் கவுன்சில் (NPCC) தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து தகவல்களும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது

