அரசிற்கு சவால் விடுத்துள்ள சஜித்

தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”இந்த முட்டாள்தனமான அரசு நாட்டை அழித்து வருகின்றது. இந்த அரசு தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகின்றது. தேர்தலை பிற்போடவே முயற்சிக்கின்றது.

தேர்தல் ஒன்று இல்லாமல் முன்னேற்றம் ஒன்று இல்லை. எனவே, அரசு தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காகப் போராடுவோம்.

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வண்ணம் கதறி அழுகிறது.

அரசாங்கத்தின் அச்சம்

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைகின்றது. காலிமுகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே. தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தைக்கூட அரசால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்க கிடைத்தது.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும்.

அரச வன்முறைக்கு நீண்ட கால ஆயுள் இல்லை

அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை. இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன.

உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றேன். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுகின்றேன்.

தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் ‘மொட்டு’ விரும்பும் எந்தத் தேர்தலையும் நடத்துங்கள்”என கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor