குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு தமது மௌன அஞ்சலியைப் பதிவு செய்தனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 12 வயதுக்குட்பட்ட 9 சிறுவர்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவர். பலர் படுகாயமடைந்து இன்றும் அந்த வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
முப்பது ஆண்டுகள் கடந்தும், நீதிக்காகக் காத்திருக்கும் அந்த ஆன்மாக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வு அமைந்தது.
குமாரபுரம் படுகொலையானது இலங்கையின் உள்நாட்டுப் போர் வரலாற்றில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்டவர்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் இறுதியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.


